Pages

Tuesday, 15 January 2013

தைத்திருநாள் வழிவகுக்கும் !!

அரசியல் தீர்வை தமிழ் மக்கள் பெற தைத்திருநாள் வழிவகுக்கும்! – செல்வம் அடைக்கலநாதன் நம்பிக்கை!!

தமிழ் மக்கள் நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளவும், சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும் தைத்திருநாள் வழிவகுக்கும் என எதிர்பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் நாம் சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து எமக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளில்  களம் இறங்கியுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தவை வருமாறு:
‘கடந்த 60 வருட காலமாக தமிழ் மக்கள் அஹிம்சை, ஆயுத வழிகளில் தமது உரிமைகளைப் பெற போராடினார்கள். ஆனால், இதனை மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிறிலங்கா அரசுகள் உதாசீனம் செய்துவிட்டன. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு எதனையும் சிறிலங்கா அரசு இதுவரை  முன்வைக்கவில்லை. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களையும் கடந்த காலங்களில் இந்த அரசு குழப்பியடித்துள்ளது. எனவே, இந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசை நம்ப நாம் தயாரில்லை.தற்போது நாட்டில் நீதி, நேர்மை, உண்மை இல்லை, இங்கு காட்டாட்சிதான் நடக்கின்றது. பிரதம நீதியரசரையே தூக்கியெறியும் இந்த அரசா தமிழருக்கு தீர்வைப் தரப்போகின்றது?
எனவே, இந்த வருடத்தில் நாம் சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து எமக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளோம். தமிழ் மக்கள் நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளவும், சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும் இந்தத் தைத்திருநாள் வழிவகுக்குமென நம்புகின்றோம். எனவே, தைப்பொங்கல் தமிழ் மக்களுக்கு  புதிய வாழ்வைக் கட்டியெழுப்ப வழிவகுக்கும் என்றும், உழவர் பெருமையினை உலகிற்கு உணர்த்தும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் தமிழ் மக்கள் அனைவரினதும் வாழ்விலும் நல்ல வாழ்வினைத் தோற்றுவிக்க வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கின்றோம். போரின் துயரங்களால் பெரும் அவலங்களை எதிர்கொண்டுள்ள எமது மக்கள் அகதி வாழ்வு இல்லாது நிம்மதியுடன் வாழ தைத்திருநாள் வழிவகுக்க வேண்டும். இடம்பெயர்ந்துள்ள எமது மக்கள் சொந்த வாழ்விடங்களில் சுதந்திரமாக வாழும் இயல்பு நிலையை தமிழர் திருநாளாம் தைத்திருநாள் தோற்றுவிக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment