Pages

Wednesday, 23 January 2013

த.தே.கூ வழக்கு தாக்கல் !!

இராணுவத்தினரால் குடும்பப் பதிவு, புகைப்படம் எடுப்பதற்கு எதிராக த.தே.கூ வழக்கு தாக்கல்


 
மன்னார் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் மீண்டும் இராணுவத்தினரால் குடும்பப் பதிவுகள் மற்றும் புகைப்படம் எடுப்பது தொடர்பாக அக்கிராம மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து குறித்த குடும்பப் பதிவுகளுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தை உடன் நாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் கட்டுக்காரன் குடியிருப்பு, பருத்திப்பண்னை, கீலியன் குடியிருப்பு, பேசாலை ஆகிய கிராமங்களில் தற்போது இராணுவத்தினர் குடும்ப பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த கிராமங்களுக்குச் செல்லும் இராணுவத்தினர் குடும்ப விபரங்களை திரட்டுவதோடு அந்த மக்களின் வீடுகளை தனியாகவும், குடும்ப உறுப்பினர்களை குழுவாகவும் புகைப்படம் எடுக்கின்றனர்.எதற்காக இந்த புகைப்படம் எடுக்கப்படுகின்றது என்று தெரியாத நிலையில் அந்த மக்கள் அச்சத்தின் காரணமாக எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.எனவே குறித்த இராணுவத்தினரால் குடும்பப்பதிவு மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடவுள்ளது.ஏற்கனவே இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட குடும்பப்பதிவுகளுக்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.இதன் போது சட்டமா அதிபரின் திணைக்களத்தினால் குறித்த இராணுவப் பதிவுகள் உடன் நிறுத்தப்பட்டு இனி குறித்த பதிவுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த வழக்கு வாபஸ் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment