டெலோவின் தலைவர் செல்வம் !
“உலகத்தை மீண்டும் ஏமாற்றும் வகையில்
இலங்கை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜெனிவாவில்
புதன்கிழமை உரையாற்றியுள்ளார். ஆனால், சர்வதேச சமூகத்தை இனியும் ஏமாற்றலாம்
என இலங்கை அரசு நினைப்பதை உடன் கைவிடவேண்டும்.வடக்கில் இராணுவப்
பிரசன்னம், மீள்குடியேற்றம், காணி விவகாரம். புனர்வாழ்வு மற்றும்
நல்லிணக்கம் உட்பட வடக்கு நிலவரம் தொடர்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க
ஜெனிவாவில் ஆற்றிய உரை உண்மைக்குப் புறம்பானது. அவர் அப்பட்டமான பொய்களை
அங்கு கூறியுள்ளார். வடக்கின் உண்மை நிலைவரங்களை ஜெனிவா செல்லும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு அங்கு எடுத்துக்கூறும்.மனித
உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளிடம் தமிழர் தாயகத்தில்
இலங்கை அரசும், படையினரும் மேற்கொள்ளும் அராஜகங்களை கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பிப்பார்கள்.இறுதிப்
போரில்தில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீள்குடியேறிவிட்டனர் என்று
அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். ஆனால், இறுதி யுத்தத்தில்
இடம்பெயர்ந்த மக்கள் யாழில் 16 அகதி முகாம்களில் இன்னும்
வாழ்கின்றனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள்
இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்குள் இருப்பதால் அங்கு சென்று குடியேற
மக்கள் அச்சமடைகின்றனர். அதேவேளை, கடந்த வருடம் செட்டிகுளம் முகாமில்
இருந்த மக்களை வலுக்கட்டாயமாக பஸ்களில் ஏற்றிச்சென்ற அரச தரப்பினர்
அவர்களை கேப்பாபிலவு காடுகளில் அந்தரிக்கவிட்டுள்ளனர்.அங்கு அவர்கள்
அடிப்படை வசதிகளின்றி அவல வாழ்வு வாழ்கின்றனர். அங்கு இராணுவத்தினரின்
கெடுபிடிகளும் இடம்பெறுகின்றன. எனவே, வடக்கில் இராணுவ ஆட்சியின் கீழ்
அச்சத்தின் மத்தியில் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இந்நிலையில், வடக்கில்
நல்லிணக்கம் என்று அமைச்சர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.இதேவேளை, ஐ.நா.
மனித உரிமைகள் சபையின் நடவடிக்கையை விமர்சிக்க இலங்கைக்கு எந்த அதிகாரமும்
இல்லை. இலங்கையின் உண்மை நிலைவரத்தை ஆராய்ந்த பின்னர்தான் சர்வதேச நாடுகள்
பிரேரணைகளைக் கொண்டுவருகின்றன. எனவே, ஜெனிவாவில் இம்முறை உலகத் தமிழர்களின்
எதிர்பார்ப்புக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்
என்றார்.
No comments:
Post a Comment