மக்களின் தீர்ப்பு அடிப்படையில் ஆட்சிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு அவர்கள் கருத்துக்கும் அபிலாஷைகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இதனை தெரிவித்தார்.

அண்மையில் திருகோணமலை சில்வஸ்டார் ஹோட்டலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தலைமையில் திருகோணமலை மாவட்ட வாக்காளர் பதிவும் வட்டாரப்பிரிப்பும் என்னும் பொருள் பற்றி பொது மக்களுடனும் புத்திஜீவிகளுடனும் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இரா. சம்பந்தன் இதனை தெரிவித்தார்.
மக்களுடைய ஜனநாயக உரிமையை பிரதிநிதித்துவப்படுத்துவது மக்களின் வாக்குகளாகும். வாக்கு மூலந்தான் ஆட்சியை அமைப்பது மக்கள் விருப்பம் எதுவொன்று அறிவது மக்களின் வாக்கு மூலந்தான்.
ஜனநாயகமென்பது மக்களின் இறைமையில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றது. இறைமையின் முக்கியமான அம்சம் ஜனநாயகம்.
வடக்கில் கிழக்கில் வாழ்ந்து வந்த தமிழ்மக்கள் 1956ஆம் ஆண்டு முதல் தமது ஜனநாயக உரிமையை ஒரு குறிப்பிட்ட அடிப்படையில் குறிப்பிட்ட கொள்கையை அடிப்படையில் குறிப்பிட்ட கொள்கையை அடிப்படையாகக் கொண்டு அந்த கொள்கையை நிறைவேற்ற தமது வாக்குகளை அளித்து வந்துள்ளார்கள்.
கெளரவத்துடனும் சுயமரியாதையுடனும் தமது பிரதேசங்களில் வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் தான் மக்கள் தமது வாக்குகளை அளித்து வந்துள்ளார்கள்.
ஆனால் இந்நாட்டிலுள்ள முக்கியமான பிரச்சினையென்னவென்றால் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை.
இதன் காரணமாகவே ஆரம்பத்தில் சாத்வீகப் போராட்டம் நடாத்தப்பட்டது. அதன்பின்பு ஆயுதப் போராட்டம் நடாத்தப்பட்டது.
வாக்குரிமையொன்றின் மூலமே எமது இலக்கை அடைய முடியுமென்பதை புரிந்து கொள்ள வேண்டும். தற்பொழுது வட கிழக்கில் குடியிருக்கும் மக்களின் வாக்குகளை வாக்காளர் இடாப்பில் சேர்த்துக் கொள்ள முழுமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் அதற்கு மக்கள் கட்சி அதன் தொண்டர்கள் கூடிய பங்களிப்புச் செய்யவேண்டும்.
தற்பொழுது தத்தமது சொந்த இடங்களில் குடியிருக்கும் மக்களிடம் மக்களைப் பதியக்கூடிய விதத்தில் எல்லோரும் செயற்பட வேண்டும். சில இடங்களில் மக்கள் வாழாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் தமது சொந்த இடங்களில் வாக்கைப் பதிவு செய்ய வாக்களிக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும.
முன்பு வட கிழக்கிலிருந்து இடம் பெயர்ந்த மக்களை அவர்கள் முன்பு வாழ்ந்த இடங்களில் வாக்காளராக பதிவு செய்வதற்குரிய சட்டம அடுத்த மாதம் பாராளுமன்றம் கூடுகிற போது இது பற்றிய சட்டம் கொண்டு வரப்படலாம். விசேடமாக வட மாகாண தேர்தலை மையமாக வைத்து சட்டம் கொண்டு வரப்படவிருக்கின்றது.
இதற்குரிய காரணம் என்னவென்றால் வட மாகாணத்திலிருந்து தமிழர்கள் அல்லாதவர்கள் குடிபெயர்ந்திருக்கிறார்கள் அவர்கள் இப்பொழுது வேறுமாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள் ஒரு காலத்தில் வட மாகாணத்தில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தவர்கள் வட மாகாணத்தில் வாழ்ந்தவர்கள் தற்பொழுது வடமாகாணத்தில் பதிவு செய்யும் வகையில் அச்சட்டம் கொண்டு வரப்படவிருக்கின்றது
அவர்கள் அவ்வாறு வடமாகாணத்தில் வாக்களிக்க விரும்பினால் அந்த உரிமையை நாங்கள் மதிக்க வேண்டும். ஆனால் அவர் அதேசமயம் வேறு மாவட்டத்தில் பதிவு செய்யமுடியாது.
என்னவென்றால் எந்தவொரு பிரஜைக்கும் இரண்டு வாக்குரிமை இருக்கமுடியாது
பல்லாயிரக்கணக்கான மக்கள் குடிபெயர்ந்து தமிழ் நாட்டிலுள்ள அகதி முகாம்களில் வாழந்து வருகின்றார்கள் பிறமாவட்டங்களிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.
அவர்களும் வடமாகாணத்தில் வாழ்ந்தவர்கள் அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. இதனை பரிசீலிக்கப்படவேண்டும் என்றும் சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.
Posted by TELOMedia on Sunday, June 2, 2013 · Leave a Comment
No comments:
Post a Comment