Thursday, 10 September 2015

மக்களின் மகத்தான வரவேற்பு !!!

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு மன்னார், ஜோசப்வாஸ் நகர் ( விடத்தல்தீவு ) மக்களின் மகத்தான வரவேற்பு !!!

தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ ) தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதனுக்கு இன்றையதினம் ( 09 - 09 - 2015 ) புதன்கிழமை மாலை மன்னாரில் உள்ள ஜோசப்வாஸ் நகர் ( விடத்தல்தீவு ) கிராம மக்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது .



நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது வாக்களித்து வெற்றி அடையச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்ற போதே இவ் வரவேற்பு வழங்கப்பட்டது.




 இவ் நிகழ்விற்கு வடமாகனசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஞா. குணசீலன் அவர்களும் மக்களால் அழைக்கபெற்றுருந்தார் .

இதன் போது பங்குத்தந்தையர்கள், சிறப்பாக அருட்பணியாளர் டெனிகலிஸ்ரஸ் ,அவர்களும் ,அருட்பணியாளர் றஜனிகாந்த் அவர்களும் ,அருட்பணியாளர் டெஸ்மன் அஞ்சலோ அவர்களும் கலந்துகொண்டு ,நன்றித்திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மேலும் இவ் நிகழ்விற்கு கிராம மக்கள் அனைவரும் , இளைஞர் யுவதிகள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,விளையாட்டுக்கழக வீரர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thursday, 27 March 2014

அமெரிக்கத் தீர்மானத்தை கூட்டமைப்போ தமிழர்களோ உருவாக்கவில்லை! எதிர்ப்பதால் என்ன பயன்?- செல்வம் எம்.பி



[ வியாழக்கிழமை, 27 மார்ச் 2014, 09:05.24 AM GMT ]

அமெரிக்கத் தீர்மானத்தினை த.தே.கூட்டமைப்போ தமிழர்களோ உருவாக்கவில்லை. இத்தீர்மானம் தமிழர்கள் விரும்பியவாறு இல்லாவிட்டாலும், மனித உரிமைகள் ஆணையத்தினூடாக சர்வதேச விசாரணையை நடத்துமளவிற்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கதென பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்ப்பவர்களால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்?- ஜெனிவாவில் செல்வம் எம்.பி அமெரிக்கத் தீர்மானத்தில் சில சாதக, பாதகம் இருந்தாலும் இதனை விமர்சிக்கும் தமிழர்களால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் என ஜெனிவாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா அரசு மீது வரவுள்ள அமெரிக்கத் தீர்மானத்தின் மூலம் எங்களுடைய மக்களின் இன்றைய துன்பத்திற்கு ஒரு விடிவு வரும் என்ற நம்பிக்கை பிறந்தள்ளது என ஜெனிவாவில் லங்காசிறி வானொலியின் விசேட செய்தியாளரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

Wednesday, 16 October 2013

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வினை தரும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை!- சிவாஜிலிங்கம்!

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வினை தரும் என்பதில் எங்களுக்கு அறவே நம்பிக்கை இல்லை என வடமாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பின் அரசியற்துறை தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று (14) மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்.

Tuesday, 15 October 2013

முல்லைதீவில் பாதிக்கப்பட்ட மீனவர்களுடன் டெலோ அமைச்சர் டெனிஸ்வரன் சந்திப்பு !

முல்லைத்தீவில் நேற்று (12) இடம்பெற்ற திடீர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களை, வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கைத்தொழில், வர்த்தகம், வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் டெலோவின் பா.டெனிஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் இன்று (13) காலை சந்தித்துள்ளார்.


இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், டெலோவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் ஆகியோரும் சென்றிருந்தனர்.


இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் மீனவ பிரதிநிதிகளுடன் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையாடினர். இதன்போது மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை அவர்களிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அனர்த்தம் இடம்பெற்ற கடற்கரை பகுதிக்குச் சென்று சேதமடைந்த படகுகளை பார்வையிட்டனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மீனவர்களையும் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குரிய நஸ்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் பா.டெனிஸ்வரன் உறுதியளித்தார்.



Saturday, 24 August 2013

வடக்கில் இராணுவத் தலையீடுகள் அதிகரிப்பு சுதந்திரமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது: கூட்டமைப்பு


நீதியானதும் நேர்மையானதுமான ஒரு தேர்தலை வடக்கில் எதிர்பார்க்கமுடியாதென தேர்தல் ஆணையாளரிடம் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தல் அடக்குமுறைகளும் மோசடிகளும் நிறைந்த தேர்தலாகவே அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் ஆணையாளர் தலைமையில் இன்று யாழில் நடைபெற்ற கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்றின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரிய யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் வேட்பாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடலில் சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,
வல்வெட்டித்துறைச் சந்தியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலமான நாலு ஏக்கர் ஆதனப் பகுதியை சுவீகரித்து அவ்விடத்தில் பாரிய ஒரு படைத்தளத்தை இராணுவம் அமைத்துள்ளது.
இக் காணி உரிமையாளர்களிடம் வீடுகளைக் கையளிக்கும் ஒரு நிகழ்வு செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி பருத்தித்துறைப் பிரதேச சபையில் நடைபெறவுள்ளது. இதுவொரு தேர்தல் முறைகேடாகும். இதனை தேர்தல் ஆணையாளர் தடுக்க வேண்டும் எனக் கோரினார்.
அப்பொழுது குறுக்கிட்ட தேர்தல்கள் ஆணையாளர் அக்கூட்டத்தினை தன்னால் தடுக்க முடியாது எனவும் வேட்பாளர்கள் இக்கூட்டத்தில் தன்னால் தடுக்கமுடியும் எனத் தெரிவித்தார்.

நவனீதம்பிள்ளையின் விஜயத்தையேட்டி யுத்தத்தினால் சேதமான வாகனங்களை மறைப்பு.


யுத்தத்தின் காரணமாக சேதமாக்கப்பட்ட மக்களின் வாகனங்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் இடம் பெறவுள்ள நிலையில் குறித்த வாகனங்களை அவர் காணமுடியாத வகையில் தற்போது மறைப்புச்செய்யப்பட்டு வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
வன்னியில் இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக அந்த மக்கள் தமது சகல உடமைகளையும் இழந்து இடம் பெயர்ந்து சென்றனர்.
யுத்தத்தின் பின் அந்த மக்கள் மீண்டும் அந்த மண்ணில் குடியேற்றம் செய்யப்பட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த மக்கள் இடப்பெயர்வுகளின் போது கைவிட்டுச் சென்ற வாகனங்கள் பயண்படுத்த முடியாத வகையில் காணப்பட்டுள்ள போதும் உரிய ஆவணங்கள் இல்லாமையினால் அவை திருப்பி வழங்கப்படாத நிலையில் படைத்தரப்பினரினால் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சுதந்திர புரம் சந்தி மற்றும் புதுக்குடியிருப்பு சந்தி ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு தொகுதி வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இதே வேலை முள்ளிவாய்க்காளில் சுமார் 250 மீற்றர் பரப்பளவில் பயண்படுத்த முடியாத வகையில் கடும் சேதங்களுக்கு உள்ளான வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கைக்க வந்து யாழ்ப்பாணம் செல்லவுள்ள நிலையில் அவற்றை அவரோ அல்லது அவரின் குழுவினரோ பார்க்கக்கூடாது என்பதற்காக குறித்த மூன்று இடங்களிலும் குவித்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களைச் சுற்றி சுமார் 15 அடி உயரம் வரை தகரத்தினால் மறைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவம் அந்த மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே பாதீக்கப்பட்ட மக்களை சந்திக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை மக்களிடம் சுதந்திரமான முறையில் அவர்களின் பிரச்சினையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.