Saturday, 24 August 2013

நவனீதம்பிள்ளையின் விஜயத்தையேட்டி யுத்தத்தினால் சேதமான வாகனங்களை மறைப்பு.


யுத்தத்தின் காரணமாக சேதமாக்கப்பட்ட மக்களின் வாகனங்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் இடம் பெறவுள்ள நிலையில் குறித்த வாகனங்களை அவர் காணமுடியாத வகையில் தற்போது மறைப்புச்செய்யப்பட்டு வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
வன்னியில் இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக அந்த மக்கள் தமது சகல உடமைகளையும் இழந்து இடம் பெயர்ந்து சென்றனர்.
யுத்தத்தின் பின் அந்த மக்கள் மீண்டும் அந்த மண்ணில் குடியேற்றம் செய்யப்பட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த மக்கள் இடப்பெயர்வுகளின் போது கைவிட்டுச் சென்ற வாகனங்கள் பயண்படுத்த முடியாத வகையில் காணப்பட்டுள்ள போதும் உரிய ஆவணங்கள் இல்லாமையினால் அவை திருப்பி வழங்கப்படாத நிலையில் படைத்தரப்பினரினால் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சுதந்திர புரம் சந்தி மற்றும் புதுக்குடியிருப்பு சந்தி ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு தொகுதி வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இதே வேலை முள்ளிவாய்க்காளில் சுமார் 250 மீற்றர் பரப்பளவில் பயண்படுத்த முடியாத வகையில் கடும் சேதங்களுக்கு உள்ளான வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கைக்க வந்து யாழ்ப்பாணம் செல்லவுள்ள நிலையில் அவற்றை அவரோ அல்லது அவரின் குழுவினரோ பார்க்கக்கூடாது என்பதற்காக குறித்த மூன்று இடங்களிலும் குவித்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களைச் சுற்றி சுமார் 15 அடி உயரம் வரை தகரத்தினால் மறைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவம் அந்த மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே பாதீக்கப்பட்ட மக்களை சந்திக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை மக்களிடம் சுதந்திரமான முறையில் அவர்களின் பிரச்சினையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment