டெலோவின் தலைவர் செல்வம் !
Posted by
Administrator on Sunday, March 3, 2013 ·
Leave a Comment

இராணுவப்
பிரசன்னம், மீளக்குடியேற்றம், காணி விவகாரம், புனர்வாழ்வு மற்றும்
நல்லிணக்கம் உட்பட வடக்கு நிலைவரம் தொடர்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க
ஜெனிவாவில் ஆற்றிய உரை உண்மைக்குப் புறம்பானது என்று தெரிவித்த தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கையை
விமர்சிக்க இலங்கைக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் ஆணித்தரமாக
இடித்துரைத்துள்ளது. அத்துடன், ஜெனிவாவில் இம்முறை உலகத் தமிழர்களின்
எதிர்பார்ப்புக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் எனவும், இனியும் சர்வதேச
சமூகத்தை ஏமாற்றலாம் என இலங்கை அரசு நினைப்பதை உடன் கைவிடவேண்டும் எனவும்
கூட்டமைப்பு கூறியுள்ளது.“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22 ஆவது அமர்வில்
இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தேவையில்லாத ஒன்று. இது
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடிப்படைக் கொள்கைகளுக்கு
முரணானது.இந்நிலையில், இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிக்கவும்,
பாதுக்காக்கவும் என்ற பெயரில் நியாயமற்ற பக்கச்சார்பான விதிகளுக்கு
அப்பாற்பட்ட மற்றும் நீதியற்ற முறையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையால்
எடுக்கப்படும் எந்தவொரு அணுகுமுறையையும் நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்”
என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத்
தூதுவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஐ.நா. மனித
உரிமைகள் பேரவையில் இலங்கைத் தரப்பு வாதங்களை முன்வைத்து உரையாற்றியபோது
தெரிவித்திருந்தார்.“வடக்கில் இராணுவத்தினர் குறைக்கப்பட்டுள்ளனர்;
இராணுவத்தினர் அங்கு மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்; வடக்கில்
மீள்குடியேற்றம் நிறைவடைந்துள்ளது; புனர்வாழ்வு நடவடிக்கை திறம்பட
நடைபெறுகின்றது; காணிப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்” என அமைச்சர்
மஹிந்த சமரசிங்க தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.இந்த உரை குறித்துக்
கருத்துத் தெரிவிக்கும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் தலைவர் செல்வம்
அடைக்கலநாதன் தெரிவித்தவை வருமாறு:
“உலகத்தை மீண்டும் ஏமாற்றும் வகையில்
இலங்கை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜெனிவாவில்
புதன்கிழமை உரையாற்றியுள்ளார். ஆனால், சர்வதேச சமூகத்தை இனியும் ஏமாற்றலாம்
என இலங்கை அரசு நினைப்பதை உடன் கைவிடவேண்டும்.வடக்கில் இராணுவப்
பிரசன்னம், மீள்குடியேற்றம், காணி விவகாரம். புனர்வாழ்வு மற்றும்
நல்லிணக்கம் உட்பட வடக்கு நிலவரம் தொடர்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க
ஜெனிவாவில் ஆற்றிய உரை உண்மைக்குப் புறம்பானது. அவர் அப்பட்டமான பொய்களை
அங்கு கூறியுள்ளார். வடக்கின் உண்மை நிலைவரங்களை ஜெனிவா செல்லும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு அங்கு எடுத்துக்கூறும்.மனித
உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளிடம் தமிழர் தாயகத்தில்
இலங்கை அரசும், படையினரும் மேற்கொள்ளும் அராஜகங்களை கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பிப்பார்கள்.இறுதிப்
போரில்தில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீள்குடியேறிவிட்டனர் என்று
அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். ஆனால், இறுதி யுத்தத்தில்
இடம்பெயர்ந்த மக்கள் யாழில் 16 அகதி முகாம்களில் இன்னும்
வாழ்கின்றனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள்
இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்குள் இருப்பதால் அங்கு சென்று குடியேற
மக்கள் அச்சமடைகின்றனர். அதேவேளை, கடந்த வருடம் செட்டிகுளம் முகாமில்
இருந்த மக்களை வலுக்கட்டாயமாக பஸ்களில் ஏற்றிச்சென்ற அரச தரப்பினர்
அவர்களை கேப்பாபிலவு காடுகளில் அந்தரிக்கவிட்டுள்ளனர்.அங்கு அவர்கள்
அடிப்படை வசதிகளின்றி அவல வாழ்வு வாழ்கின்றனர். அங்கு இராணுவத்தினரின்
கெடுபிடிகளும் இடம்பெறுகின்றன. எனவே, வடக்கில் இராணுவ ஆட்சியின் கீழ்
அச்சத்தின் மத்தியில் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இந்நிலையில், வடக்கில்
நல்லிணக்கம் என்று அமைச்சர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.இதேவேளை, ஐ.நா.
மனித உரிமைகள் சபையின் நடவடிக்கையை விமர்சிக்க இலங்கைக்கு எந்த அதிகாரமும்
இல்லை. இலங்கையின் உண்மை நிலைவரத்தை ஆராய்ந்த பின்னர்தான் சர்வதேச நாடுகள்
பிரேரணைகளைக் கொண்டுவருகின்றன. எனவே, ஜெனிவாவில் இம்முறை உலகத் தமிழர்களின்
எதிர்பார்ப்புக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்
என்றார்.