சகோதர யுத்தம் பாகம் இரண்டு
ரெலோ இயக்கம் புலிகளால் தடை செய்யப்பட்டதும் ரெலோ அமைப்பிலிருந்த பலர் வெளிநாடுகளிற்கும் இந்தியாவிற்கும் தப்பிச்சென்றிருந்தனர். ஈழத்தில் ரெலோ அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டது இந்திய உளவு அமைப்பான றோ அதிகாரிகளிற்கு பெரும் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் கொடுத்திருந்தது. அவர்கள் இந்தியாவில் மீதமிருந்த ரெலோ உறுப்பினர்களை மீண்டும் ஒன்று திரட்டி நவீன ஆயுதங்களுடன் விசேட பயிற்சிகளும் கொடுத்து புலிகளிற்கெதிராக இன்னொரு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்களை செய்தனர்.அவர்களின் அடுத்த முக்கிய இலக்குகளாக அன்றைய புலிகளின் தளபதிகளே குறிவைக்கப்பட்டிருந்தனர்.மிக முக்கியமாக யாழ் மாவட்டத் தளபதி கிட்டு குறிவைக்கப்பட்டார்.
அதற்கு முன்னேற்பாடாக ரெலோவின் விசேட பயிற்சி பெற்ற சிலர் கடல் வழியாக ஈழத்திற்கு அனுப்பிவைக்கட்டனர். அவர்கள் திட்டப்படி புலிகளின்முக்கிய தளபதிகளின் நடமாட்டங்கள் மற்றும் புலிகளின் முகாம்கள் பற்றிய விபரங்களை திரட்டி வைத்திருப்பார்கள் சரியான சந்தர்ப்பம் வந்ததும் தமிழ்நாட்டில் தயாராக இருந்த தங்கள் சகாக்களிற்கு தகவல் அனுப்பியதும் அவர்கள் மன்னார் வழியாக தமிழீழத்தில் வந்திறங்கி சிறு குழுக்களாக பிரிந்து சென்று ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் உதவியுடன் புலிகளின் முக்கிய தளபதிகள் மற்றும் முகாம்கள் மீது தாக்குதல் நடாத்தி அழிப்பது.இதுவே திட்டம். இப்படி உளவு பார்ப்பதற்காக ஈழத்திற்கு வந்திருந்த ரெலோ உறுப்பினர்கள் தங்கியிருக்கவும் மற்றும் வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கச்சொல்லி ஈ.பி.ஆர்.எல்.எவ்.அமைப்பிற்கு றோ அதிகாரிகள் கட்டளையிட்டிருந்தனர்.அப்படி ஈழத்தில் புலிகளை உளவு பார்க்க வந்தவர்களில் ஒருவர் யாழ்..நவாலியிலும் மற்றொருவர் அசு்சுவேலியிலும் புலிகளிடம் பிடிபட்டனர்.அவர்களிடம் புலிகள் மேற்கொண்ட விசாரணையிலேயே மேற்சொன்ன விபரங்கள் யாவும் புலிகளிற்கு தெரியவந்தது.
அதே நேரம் அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ். முகாம்களிலேயே தந்கியிருந்த விடயமும் தெரியவந்தது.முதலில் நவாலியில் பிடிபட்டவர் சொன்ன தகவல்களை வைத்து புலிகள் மன்னார் மற்றும் மட்டக்கிளப்பிலும் பலரை கைது செய்தனர்.அப்பொழுதுதான் ரெலோ அமைப்பில் ஆயுதம் தாங்கிய 60 பேர் கொண்ட குழுவொன்று மன்னாரில் வந்திறங்கப்போகின்ற முழு விபரங்களும் புலிகளிற்கு கிடைத்தது. அவர்கள் கொடுத்திருந்த தகவலினடிப்படையில் புலிகளின் அன்றைய மன்னார் மாவட்டத்தின் தளபதி ராதா மன்னார் கடற்கரை பகுதிகளில் காவலை தீவிரப்படுத்தியிருந்தார்.பிடிபட்ட ரெலோ உறுப்பினர்கள் கொடுத்திருந்த தகவல்கள் பொய்க்கவில்லை அவர்கள் சொன்னது போலவே ஒரு பின்னிரவு வேளையில் 3 மீன்பிடி றோலர்களில் வந்த ரெலோ குழுவின் மீது புலிகள் கடற்கரையிலிருந்து தாக்குதலை நடத்தினர். முதலாவதாய் வந்த றோலர் ஆர்.பி.ஜி தாக்குதலில் முழுவதுமாய் அழிந்துபோக பின்னால் வந்து கொண்டிருந்த றோலர்களிலிருந்து ரெலோ உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியபடியே மீண்டும் கடலிற்குள் சென்று மறைந்து விட்டார்கள்.
அவர்கள் தமிழ்நாட்டிற்கே போயிருப்பார்கள்.அதற்குப் பின்னர் ரொலே அமைப்பு புலிகள் மீதான நேரடித்தாக்குதல் எதனையும் நடத்த முயற்சிக்கவில்லை..இனி அப்படியானதொரு முயற்சியை மேற்கொள்வதில் பயனில்லையென்று றோ அதிகாரிகளிற்கும் புரிந்து போயிருக்கும்.மீதமாய் ஈழத்திலிருந்த பெரிய அமைப்புக்கள் புளொட்டும். ஈ.பி.ஆர்.எல்.எவ்.வும்தான் புளொட் அமைப்பு நிறைய உறுப்பினர்களை மட்டுமே சேர்த்து வைத்திருந்தது. அவர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை. உதாரணமாய் சொல்லப்போனால் அவர்களது இராணுவ அமைப்பின் முகாமில் 50 பேர் இருந்தால் அவர்களிடம் இரண்டு கைக்குண்டுகளே அல்லது ஒரு 303 ரக துப்பாக்கியோதான் இருக்கும். அது மட்டுமல்ல அவர்களிற்குள்ளேயே குழுசண்டைகளும் தலைமைக்கெதிரான போராட்டங்களும் வலுத்திருந்தது.அதன் உறுப்பினர்களிற்கு ஒரு நேர உணவே பெரிய பிரச்சனையாய் இருந்த காலகட்டம் அது...எனவே அடுத்ததாய் புலிகளிற்கெதிராக கிழப்பி விடுவதற்கு ஈழத்தில் ஓரளவு ஆயுதபலத்துடனும் அதிகளவு உறுப்பினர்களையும் கொண்டிருந்த அமைப்பு ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்புத்தான்.ஆனால் அவர்கள் மார்க்சிய கொள்கைகளை தங்களது இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளாக கொண்டிருந்ததால்.
றோ அதிகாரிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ்.அமைப்பின் மீது பெரிய பற்றுதலைக் கொண்டிருக்கவில்லை.ஆனாலும் அப்பொழுது றோ அதிகாரிகளிற்கு வேறு வழியிருக்கவில்லை.அதே நேரம் ரெலோவின் உளவு அமைப்பினர் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்ததும் அவர்கள் தங்கள் முகாமிலேயே தங்கியிருந்த விபரங்கள் தாக்குதல் நடத்துவதற்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் ஒழுங்கு படுத்திக் கொடுத்தது போன்ற விபரங்கள் புலிகளிற்கு தெரிந்திருக்கும் எனவே புலி தங்கள்மீதும் பாயலாம் எனவே அதற்கு முன்னரே தாங்கள் புலிகளின் மீது ஒரு தாக்குதலை நடத்தவேண்டும் என்கிற தயாரிப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பினர் தீவிரமாய் இருந்தனர்.
தவளையும் தன் வாயால் கெடும் என்றொரு பழமொழி உண்டு (சில இடங்களில் நுணலும் என்பார்கள்)அந்தப் பழமொழி நூறு வீதம் ஈ.பி அமைப்பினர்களிற்கு பொருந்தும். ஒரு கெரில்லா இயக்கத்திற்கு வேண்டிய முக்கியமான இரகசியம் காத்தல் என்கிற பழக்கம் கட்டுப்பாடு அவர்களிடம் அறவே கிடையாது. வெறும் வாய்சவாடல் அடிப்பதில் கெட்டிக்காரர்கள்.வாயாலேயே கரைநகர் கடற்படை முகாமையும் . கிளி நொச்சி இராணுவ முகாமையும் தகர்த்தவர்கள்..அதே பேலவே புலிகளையும் இன்னும் கொஞ்சக்காலங்களில் அழித்து விடுவோம் புலிகளிடம் போய் சொல்லுங்கள் என்று பொது மக்களிடம் சொல்லித் திரிந்தது மட்டுமல்ல ஆர்வக் கோளாறில் சில இடங்களில் பாசிசப் புலிகளின் அழிவு நெருங்கி விட்டது என்று சுவரொட்டிகளும் ஒட்டியிருந்தனர்.இந்தக் காலகட்டத்தில் ஒரு சுவாரசியமான சம்பவமும் நடந்தது யாழ்..நவாலி கிராமத்தில் புலிகளின் உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தத் திட்டமிட்டு ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர்கள் இருவர் மறைந்திருந்தனர். புலி உறுப்பினரும் சைக்கிளில் அந்தவழியால் வரவேவே மறைந்திருந்தவர்கள் கைக்குண்டினை புலி உறுப்பினரை நோக்கி எறிந்திருக்கிறார்கள் குண்டு வெடிக்கவில்லை. இரவு நேரமாகையால் புலி உறுப்பினரும் கைக்குண்டு வந்து விழுந்ததை கவனிக்காமல் தன்பாட்டில் போய் விட்டார். குண்டினை எறிந்தவர்களினுள் ஒருவர் குண்டு ஏன்வெடிக்கவில்லையென்று போய் பார்த்தபொழுதுதான் அந்தக் குண்டு வெடித்தது படு காயங்களிற்குள்ளானவர் பின்னர் இறந்து போனார்.
இப்படி நிறைய இவர்களைப்பற்றி எழுதலாம். அனால் விடயத்திற்கு வருவோம்.இவர்கள் பாசிசப்புலிகளை அழிப்போம் என்று சொல்லித்திரிந்து கொண்டிருக்கும் பொழுதே அவர்களின் யாழ்மாவட்டத்தின் இராணுவ பொறுப்பிலிருந்த டக்லஸ்தேவானந்தாவிற்கும் (இன்றைய ஈ.பி.டி.பி. தலைவர்) ஈ.பி. தலைமைக்கும் பிரச்சனை உருவாகி உச்சத்தை அடைந்திருந்தது. அதே நேரம் அந்த அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளராயிருந்த டேவிற்சனும்(ஈழமணி) ஈ.பி.ஆர்.எல்.எவ்.தலைமையுடன் முரண்பட்டு வெளியேறியிருந்தார். இதனால் அவர்களின் புலிகள் மீதான தாக்குதலும் வாயளவிலேயே இருந்து கொண்டிருந்த நிலையில் 86ம் ஆண்டு மார்கழி மாதம் புலிகள் வடக்கு கிழக்கெங்கும் ஒரு நள்ளிரவு ஈ.பி.ஆர்.எல்.எவ். முகாம்கள் மீது தாக்குதலை தொடுத்து காலை விடிவதற்குள்ளாகவே அனைத்து முகாம்களையும் தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தனர். இவை இரண்டும்தான் புலிகளின் மீது சுமத்தப்படுகின்ற சகோதர யுத்தம் என்கிற சொலாடல். யுத்தகளத்தில் நிற்கும் வீரன் அது யாராகஇருந்தாலும். அவனிற்கு தெரிந்தது இரண்டேயிரண்டுதான். அதாவது கொல் அல்லது கொல்லப்படுவாய். எனவே செய் அல்லது செத்துமடி.புலிகளிற்கும் அன்று அதே நிலைமைதான் கொல்லாவிடில் கொல்லப்பட்டிருப்பார்கள்.
ஏனெனில் அதற்கு வேண்டிய அத்தனை முயற்சிகளையும் இந்திய அதிகாரம் இலங்கையரசுடன் சேர்ந்து செய்தது. இன்னமும் செய்து கொண்டுதானிருக்கின்றது. ஆனாலும் தமிழர் உரிமைப்போர் செத்து மடியாது செய்துகொண்டுதானிருக்கும்........
நான் இரண்டு பாகமாக இதனை எழுதி முடிக்கலாமென திட்டமிட்டிருந்தேன் ஆனாலும் அது இன்னம் கொஞ்சம் நீண்டுவிட்டது. எனவே அடுத்த பாகத்துடன் நிறைவு செய்கிறேன்....
முதற் பாகத்தினை படிக்க இங்கு அழுத்தவும்
No comments:
Post a Comment